மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ரி20; போராடித் தோற்றது இலங்கை
சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் போராடி வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் முதலில் நிறைவுற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதுடன் மிகுதி 2 போட்டிகளும் மழையால் கழுவப்பட ஒருநாள் தொடர் 1:0 என இலங்கை வசமானது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (12) ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்து வீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய, இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை பெற்று, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், ஈஷான் மலிங்க 1 விக்கெட்டையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
