இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அந்தக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை முதல் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளிலும் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பயணிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
