“உமரியன்ஸ்” தேசிய மட்டத்தில் மற்றுமொரு வெற்றியைப் பதிவு செய்தது
புத்தளம் மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் புளிச்சாக்குளம் மாணவி டபிள்யூ.ஏ.பி.தனுத்ரா பெர்னார்டோ, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய 62வது கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் போட்டியில்
16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் 1.49 மீற்றர் உயரம் பாய்ந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இச்சாதனையின் மூலம் பாடசாலையின் பெயரை தேசிய அரங்கில் உயர்த்திப் பேச வைத்த மாணவியையும், அவரின் பெற்றோரையும், பயிற்றுவிப்பாளர்களையும், வழிகாட்டிய ஆசிரியர்களையும், அதிபர் எம்.யூ.எம். சாஜஹான் உள்ளிட்ட முழுப் பாடசாலை சமூகமும் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
“உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றியின் திறவுகோல்கள்” என்பதற்கேற்ப தேசிய மட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவி டபிள்யூ.ஏ.பி. தனுத்ரா பெர்னார்டோவுக்கு ஊர் தழுவிய வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.



(எம்.யூ.எம். சனூன்)
