Sunday, June 14, 2026
Latest:
விளையாட்டு

சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்த கத்தார்; உலகக்கிண்ண வரலாற்றில் முதல் புள்ளியைப் பெற்றது

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கத்தார் அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து சமநிலை செய்ததன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை கத்தாரிலும், ஒட்டுமொத்த அரபு நாடுகளிலும் பெரும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

உலக்கிண்ண கால்பந்தாட்டத் திருவிழாவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெற்ற போட்டியின் 94-வது நிமிடத்தில், கத்தார் வீரர் பூவாலம் கூகி (Boualem Khoukhi) கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, சுவிட்சர்லாந்து வீரர் மிரோ முஹெய்ம் (Miro Muheim) எதிர்பாராதவிதமாக தனது சொந்தக் கோல் வலையிலேயே பந்தை முட்டி (Own goal), கத்தார் அணிக்கு ஒரு புள்ளியைப் பெற்றுத் தந்தார். போட்டி முழுவதும் சுவிட்சர்லாந்து அணியின் கடும் தாக்குதல்களைக் கத்தார் அணி சிறப்பாக எதிர்கொண்டது.

கத்தார் அணியின் கோல்காப்பாளர் மஹ்மூத் அபூநாடா (Mahmoud Abunada), சுவிட்சர்லாந்து அணியின் பல கோல் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தி, அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். இவரது அபாரமான ஆட்டத்திற்காக, அவர் ‘போட்டியின் சிறந்த வீரர்’ (Man of the Match) விருதைப் பெற்றார். இறுதி ஊதல் ஒலிக்கப்பட்டதும், களத்தில் சோர்வாக விழுந்த அபூநாடா, பின்னர் தனது சக வீரர்களுடனும், பயிற்சியாளர் ஜூலென் லோபெடெகி (Julen Lopetegui) மற்றும் பயிற்சியாளர் குழுவுடனும் இணைந்து இந்த வரலாற்று வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினார்.

இந்த கடைசி நிமிட கோல், மைதானத்தில் இருந்த கத்தார் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொண்டாட்டம் கத்தார் நாடு முழுவதும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரபு உலகம் முழுவதும் பரவியது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “கத்தாரில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு வாழ்த்துகள். அட்லாண்டிக் முதல் வளைகுடா வரை உள்ள அனைத்து அரபு மக்களுக்கும் இது ஒரு தகுதியான கொண்டாட்டம். ‘அல்-அன்னபி’ (Al-Annabi) இறுதி நிமிடம் வரை போராடி, சாம்பியன்களுக்குரிய மன உறுதியுடன் ஒரு மதிப்புமிக்க புள்ளியைப் பெற்றுள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

டொராண்டோவில் கனடா மற்றும் பொஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான போட்டி வெள்ளிக்கிழமை சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, தற்போது ‘குரூப் பி’ (Group B) பிரிவில் உள்ள நான்கு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இதனால், அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற்று வெளியேற்றச் சுற்றுக்கு (Knockout stages) முன்னேற அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *