பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்ட 10 கோடி பெறுமதியான உயர் ரக கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.10.70 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தல் குருவி கைது செய்யப்பட்டார்.
பாங்காக்கில் இருந்து வந்த தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த பயணிகளை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். சந்தேகத்திற்கிடமாக வந்த 34 வயதுடைய ஆண் பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.அதில், சுற்றுலாப் பயணி விசாவில், தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு, அடுத்த சில மணி நேரங்களில், தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு திரும்பி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, 23 பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட நிலையில் 10 கிலோ 700 கிராம் உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது.இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.70 கோடி. சுங்க அதிகாரிகள் அந்த கடத்தல் பயணியை, போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டம் மற்றும் சுங்க சட்ட விதிமுறைகளின்படி கைது செய்தனர்.
அதோடு அவரிடம் இருந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்ததில், கைது செய்யப்பட்ட நபர் சர்வதேச போதை கடத்தும் கும்பலிடம் கடத்தல் குருவியாக வேலை செய்து வந்துள்ளார்.
பொருட்களின் மதிப்புகளுக்கு தகுந்தபடி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கடத்தல் குருவியான இவரை தாய்லாந்திற்கு அனுப்பியது யார், சென்னையில் யாரிடம் கொடுக்க கஞ்சா கடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். ரூ.10.70 கோடி மதிப்புடைய, உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
