மாஸ்டர் பிரிண்டர்ஸ் ‘கெட்டலொக்’ வெளியீட்டு விழா கல்முனையில்
மாஸ்டர் பேக்கேஜிங் இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் மாஸ்டர் பிரின்டர்ஸ் புதிய கெட்டலொக் (Catalogue) வெளியீட்டு விழா (17) கல்முனையில் நடைபெற்றது.
கல்முனை மயோன் பிலாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியா- தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.எம். ஷாஜஹான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கௌரவ அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அச்சு மற்றும் பொதியிடல் துறையில் மாஸ்டர் பிரின்டர்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே தொகுப்பில் அறிமுகப்படுத்தும் வகையில் புதிய கெட்டலொக் வெளியிடப்பட்டது. இந்த புதிய கெட்டலொக் அறிமுக உரையை கல்வியலாளர் றிசாத் செரீப் நிகழ்த்தினார்.
நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள், அச்சுத் தீர்வுகள் மற்றும் பொதியிடல் துறையிலான சேவைகள் தொடர்பான தகவல்களை வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில் இந்த கெட்டலொக் தயாரிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் ஊடகவியலாளர்கள், இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



















