உலக சாதனையுடன் நிறைவடைந்தது சவூதி இளவரசரின் ஒட்டகத் திருவிழா : இலங்கையரின் பங்களிப்புக்கும் பாராட்டு
சவூதி அரேபியாவில் பாரம்பரியத்தின் அடையாளமாகக் கருதப்படும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா, ஒரு மாத கால நிகழ்வுகளின் பின்னர், (13) ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நிறைவடைந்தது.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பமான இந்த உலகின் மிகப்பெரிய ஒட்டகத் திருவிழாவில், இம்முறை முதல் முறையாக 20,000 க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் போட்டிகளில் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்துள்ளன.
கடந்த ஆண்டும் அதிக ஒட்டகங்கள் பங்கேற்றமைக்காக, இவ்விழா உலக சாதனை விருதைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விழாவைப் பார்வையிடச் சென்றிருந்த சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இந்த மாபெரும் கலாசார நிகழ்வு, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது, கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழாவின் ஊடகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும், காணொளி வடிவமைப்பாளருமான முஹம்மது ஸைத்தின் சிறந்த பணிகளையும் தூதுவர் வெகுவாகப் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.





( ஐ. ஏ. காதிர் கான் )
