ஈரானிய மாலுமிகளை தாயகம் அனுப்ப வெளிவிவகார அமைச்சு தாமதிப்பது ஏமாற்றமளிக்கிறது – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு!

ஈரானிய கப்பலில் தங்கியுள்ள மூன்று மாலுமிகளை அவர்களின் குடும்பத்தாரிடம் திருப்பியனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து மௌனம் காத்து நடவடிக்கையெடுக்காமலிருப்பது ஏமாற்றமளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பாதுகாப்பு பணியாட்டொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு குறித்து தாம் விவாதிப்பதாகவும், நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இத்தகையதொரு பதவி அவசியமற்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதால் செலவினங்களைக்குறைக்கும் நோக்கில் இப்பதவியை இரத்து செய்வதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, இன்றைய நாளிதழ்களைப் பார்க்கும் போது, இந்தியப்பெருங்கடலில் நமது நாடு எவ்வளவு முக்கியத்துவமிக்க மூலோபாய அமைவிடத்தில் அமைந்திருக்கின்றதென்பதை உணர முடிகின்றது. இந்த அமைவிடம் சர்வதேச வல்லரசுகளுடனான நமது இராஜதந்திர உறவுகளில் ஒரே நேரத்தில் சாதகமாகவும், அதே வேளையில், சவாலாகவும் அமைகின்றது.
