க.பொ.த சாதாரண தர மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டு முடிவுகளை, விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப் பரீட்சை முடிவுகள் தாமதமாவதால், வேறு பாடசாலைகளுக்கு மாறுவதற்கு எதிர்பார்க்கும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை, 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றதுடன், அதற்கான முடிவுகள் 2026 ஜூன் 19 அன்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, குறித்த பரீட்சை முடிவுகளின் மீள் மதிப்பீடு செய்வது தொடர்பில் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையும் நிறைவடைந்து, தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும், சாதாரண தர மீள் மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என, சாதாரண தர மாணவர்களால் பரீட்சைத் திணைக்களத்திடம் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
