நாட்டில் 89.000 ஐத் தாண்டிய டெங்கு நோயாளர் எண்ணிக்கை
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை நேற்று (08) வரை பதிவான தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டில் டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் பதிவான மொத்த நோயாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இது மொத்த எண்ணிக்கையில் 52.92 சதவீதம் (47,310) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில், கம்பஹா மாவட்டத்திலேயே தொடர்ந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய நிலவரப்படி கம்பஹா மாவட்டத்தில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 19,000 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.
எவ்வாறாயினும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 4,048 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
