22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்; போராட்டத்துக்குத் தயாராகும் சட்டத்தரணிகள்
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கான அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கம் இந்த திருத்தத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள நிலையில், இந்தத் திருத்தத்தைக் கைவிட அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகச் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு எச்சரித்துள்ளது.
“பிரதம நீதியரசர் அறுபத்தேழு வயதை அடையும் திகதி அல்லது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் திகதி ஆகிய இரண்டில் எது முந்தியதோ அதுவே அவரது ஓய்வுபெறும் திகதியாக அமையும் என்று அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அனுர மெத்தேகொட, சட்டத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த நகர்வுக்கு எதிராகப் படிப் படியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
“தேவையேற்பட்டால் தாங்கள் வீதியில் இறங்கிப் போராடப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியலமைப்பில் தற்காலிகத் திருத்தங்களைச் செய்வதை விட, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதே சிறந்த தேர்வாக இருக்கும் என்று மெத்தேகொட கூறியுள்ளார்.
