சுகாதார உதவியாளர் நியமனங்களில் கிழக்கு சுகாதார தொண்டர்களையும் உள்வாங்கவும்;பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் உதுமா லெப்பை எம்.பி கோரிக்கை
சுகாதார உதவியாளர் நியமனங்களில் கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமா லெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. ஆளும்கட்சி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த உதுமா லெப்பை எம்.பி தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் சுகாதார சேவைக்கு கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக அர்ப்பணிப்போடு பணியாற்றி வந்துள்ளனர்.
இருந்தும் சுகாதார அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட சுகாதார உதவியாளர் நியமனங்களில் கிழக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களாகப் பணி புரிந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. அதனால் இந்த சுகாதார தொண்டர்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலத்திற்கு முன்பாக நியமனம் கோரி அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஆகவே கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் நியமனக் கோரிக்கை தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி எதிர்காலத்தில் வழங்கப்படவிருக்கும் சுகாதார உதவியாளர் நியமனங்களில் அவர்களையும் உள்வாங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இக்கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, தற்போது சுகாதார உதவியாளர் வெற்றிடங்களில் 60 சதவீதமானவற்றை நிரப்புவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் விடயமாக ஆராய்ந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்


