உள்நாடு

அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக சிரேஸ்ட அதிகாரி எஸ்.கரன் நியமனம்

அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர சிரேஸ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிருவாக அமைச்சின் ஊடாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்று (04) அவர் கடமையினை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.

மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.ஜெகராஜன் முன்னிலையில் அவர் கடமையினை பொறுப்பேற்றார். அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த அழகம்மா சுப்பிரமணியம் அவர்களின் மகனான இவர், சிவக்கொழுந்து சங்கரப்பிள்ளையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

இவர் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் பாடசாலையில் 5ஆம் தரம் வரை கற்றதுடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் உயர்தரம்வரை கற்று கிழக்கு பல்கலைக்கழக விசேட பொருளாதாரமாணி பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.

பாடசாலைக் காலத்தில் தான் ஒரு நிருவாக சேவை அதிகாரியாக வரவேண்டும் எனும் குறிக்கோளுடன் கற்ற இவர், இலங்கை நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து உதவிப் பிரதேச செயலாளராகவும் பிரதேச செயலாளராகவும் திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி வாகரை உள்ளிட்ட பல்வேறு பிரதேச செயலகங்களில் கடமையாற்றினார்.

தொடர்ந்து தொழில் அமைச்சின் உதவிச் செயலாளராக கொழும்பில் நியமனம் பெற்ற இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சமூக சேவைத்திணைக்களத்தின் ஊடாக மிகக்குறுகிய காலத்தில் அதிகளவான பல பணிகளை கிழக்கு மாகாணம் முழுவதுமாக மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று (04) சமுர்த்திப்பணிப்பாளராக நியமனம் பெற்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *