மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை; இலங்கை மின்சார சபை
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய அமைப்பு செயற்பாட்டு நிறுவனம் சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து கணக்கீடுகளின்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகச் செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்கட்டண முறைமையே தொடர்ந்து அமுலில் இருக்கும்.
மேலும், நிலக்கரியின் தரப் பிரச்சினையால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, மூன்றாம் காலாண்டில் மொத்த மின்சார விநியோகச் செலவு ரூ.186,027 மில்லியனாகவும், மொத்த வருமானம் ரூ.185,610 மில்லியனாகவும் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் ரூ.417 மில்லியன் மட்டுமே என்பதால், மின்கட்டணத்தை மாற்றத் தேவையில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
