மண்கும்பான், வெள்ளக் கடற்கரை ஜும்ஆப் பள்ளிவாசலின் மீள்கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு
யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், வெள்ளக் கடற்கரை ஜும்ஆப் பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான அடிக்கல் நடும் விழா இன்று (02) ஞாயிற்றுக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பரின் பிரதம பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் கலந்துகொண்டார்.
வெள்ளக்கடற்கரை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கட்டுமானக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட கிளைத் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸின் (காஸிமி) கிராஅத்துடன் ஆரம்பமானது.
பள்ளிவாசல் பொருளாளர் எஸ்.எச்.எம்.நியாஸின் தலைமையுரையைத் தொடர்ந்து, மண்கும்பான் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் அ. அன்ரன் ஜேசுதாசன், கிராம மட்டத் தமிழ் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், க.இளங்குமரன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைசல், வேலனை பிரதேச சபைத் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், வேலனை பிரதேச செயலாளர் த.அகிலன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கட்டுமானக் குழுவினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, பள்ளிவாசல் மீள் கட்டுமானத்துக்கான அடிக்கல் நடும் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.













