ஓட்டமாவடியில் திருடர்களின் வினோதச் செயல்
மோட்டார் சைக்கிளை திருடிய நபர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளை திருடிய வீட்டில் வைத்துச் சென்றுள்ள வினோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் (14) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமெராவில் பதிவாகி இருந்ததுடன், திருடர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திருடர்கள் இன்று (15) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளை திருடப்பட்ட இடத்தில் வைத்துச் சென்றுள்ளனர்.
அதிகாலை வேளையில் வெளியே வந்த வீட்டு உரிமையாளர், தனது மோட்டார் சைக்கிள் மீண்டும் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு வியப்பிலும் மகிழ்ச்சியிலும் உறைந்து போனார்.
திருடர்கள் ஏன் மீண்டும் வந்து வண்டியை விட்டுச் சென்றார்கள் என்பது மர்மமாக உள்ள நிலையில், இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான் – ஓட்டமாவடி நிருபர்)
