பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? கலீலுர் ரஹ்மான் கேள்வி
கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ.) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளின் நினைவு மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் ஏன் தேசிய மட்டத்தில் உரிய கவனம் பெறவில்லை என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், எந்தப் பிள்ளையும் தனது பெற்றோரின் அரசியல் அல்லது செயல்களுக்குப் பொறுப்பாகக் கருதப்படக் கூடாது என்பது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படை கொள்கையாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, பிரபாகரனின் மகனைப் பற்றிப் பேசும் அரசியல் தலைவர்கள், அவரது உத்தரவின் பேரில் உயிரிழந்த ஏனைய சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர் போராளிகளின் நிலை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
1990 ஜூன் 11 ஆம் திகதி இந்திய அமைதிப்படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னணியில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அழைக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்கள் கடந்த 36 ஆண்டுகளாக நீதி மற்றும் உண்மையை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாகவும், பல குடும்பங்களுக்கு இன்னமும் தெளிவான பதில்களோ, உரிய அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சமூகத்தின் துயரத்தைப் பற்றி பேசுவது தவறல்ல என்றாலும், ஒரு தரப்பினரின் வலி மட்டுமே தேசிய நினைவகத்தில் இடம்பெற்று, மற்றொரு தரப்பினரின் துயரம் புறக்கணிக்கப்படுவது சமநீதிக்குப் பொருந்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகவியல் ஆய்வுகளில் “போட்டி பாதிக்கப்பட்ட நிலை” (Competitive Victimhood) என குறிப்பிடப்படும் சூழ்நிலை இலங்கையிலும் காணப்படுவதாகவும், சில சமூகங்களின் துயரங்கள் ஊடகங்கள் மற்றும் அரசியல் அரங்குகளில் அதிக கவனம் பெறும் நிலையில், மற்ற சில சமூகங்களின் அனுபவங்கள் மௌனமாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990 ஜூன் 11 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் சாதாரண போர்ச் சூழ்நிலை நிகழ்வாக அல்லாது, சரணடையும் உறுதியின் கீழ் ஆயுதங்களை ஒப்படைத்த அரச அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும் என்றும், இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 1990 ஜூன் 11 படுகொலையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் தேசிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்றும், வருடாந்தம் தேசிய மட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பாடசாலை பாடப்புத்தகங்களில் இந்த வரலாற்றுச் சம்பவம் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு பிள்ளையின் உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, நாட்டிற்காக உயிர்நீத்த தந்தையரின் நினைவையும் பாதுகாப்பது அதே அளவு முக்கியமானது. அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமமான நினைவும் நீதியும் வழங்கப்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் உருவாகும்” என கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
