மொரிஷியஸில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு தொடக்கம்மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவின் முக்கிய தீவு நாடான மொரிஷியஸில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நேற்று (11) ஆரம்பமாகியுள்ளது.
செப்டெம்பர் 11 முதல் 13ஆம் திகதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் மொரிஷியஸ் நாட்டின் துணை அதிபர் Jean Yvan Robert Hungley கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அத்துடன், அந்நாட்டைச் சேர்ந்த ஐந்து அமைச்சர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்மோகன் அவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றுகூடும் இம்மாநாடு, சர்வதேச அளவில் தமிழர்களின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் முக்கிய தளமாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டை டாக்டர் V.R.S. சம்பத் தலைமை ஏற்று வழிநடத்தி வருகின்றார். மெட்ராஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி மற்றும் இந்தியன் பிஸ்னஸ் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இம்மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
