உள்நாடு

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2014 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின பேரணியில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணம் செலுத்தியமை தொடர்பாக, அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான பியங்கர ஜெயரத்னவிற்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், அதன் தீர்ப்பை அறிவிப்பதற்காக இன்றைய தினம் (01) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் கணக்கிலிருந்து குறித்த உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக மாரவில பகுதியில் அமைந்துள்ள தனியார் கேட்டரிங் நிறுவனம் ஒன்றுக்கு 3,30,000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த பணத்தைச் செலுத்துவதற்காக அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பியங்கர ஜெயரத்ன, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியைத் தூண்டியுள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *