தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் போருதோட்டையில் ஆரம்பம்
42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நலன்புரி நிகழ்ச்சித் தொடர் இன்று (ஆகஸ்ட் 22) நீர்கொழும்பு, போருதோட்டைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு, போருதோட்டை பிரதான ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் உள்ளிட்ட அழைப்பாளர்களின் பங்களிப்புடன், அல்-பலாஹ் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமின் பணிகள் பார்வையிடப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
அவ்வேளையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பேருவளையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லத்தீப் ஹாஜியார் அவர்களினால் அல்-பலாஹ் மகா வித்தியாலய மாணவச் செல்வங்களுக்காக நவீன ஸ்மார்ட் போர்ட் (Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள், நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள், மௌலவிமார்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.






முஷாரிப் மொஹிதீன்
ஊடக செயலாளர்,
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் அவர்களின் அலுவலகம்
