16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தில் புத்தளம் மாநகரமும் தெரிவு
நாட்டின் 16 நகரங்களை, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தில் புத்தளம் மாநகரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, புத்தளத்தின் நகர அபிவிருத்தி வரலாற்றில் முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான விசேட பாராளுமன்ற கலந்துரையாடல், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தளம் மாநகரம் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டதில், புத்தளம் மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் எதிர்கால நகர அபிவிருத்தித் திட்டங்கள் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கை முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் மாநகரம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான விசேட மற்றும் நீண்டகால அபிவிருத்திப் பயணத்தில் இணைக்கப்படவுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மற்றும் நாத்தாண்டி நகரங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(எம்.யூ.எம்.சனூன்)
