விளையாட்டு

2027 ஐ.சி.சி.உலகக் கிண்ணம்; இலங்கை அணி நேரடித் தகுதி பெற்றது

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டித் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணிகளில் இருந்து, இணைப் போட்டி நடத்துநர்களான தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளைத் தவிர்ந்த ஏனைய அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும் வகையில் தகுதிச்சுற்று நடைமுறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அந்த அணியும் உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதியை உறுதி செய்துள்ளது.

இதன்படி, இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

மேலும், போட்டியை நடத்தும் நாடுகளான தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன.

இதன் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது. அந்த அணி உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று பிரதான தொடருக்கான இடத்தைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *