Tuesday, August 11, 2026
Latest:
உள்நாடு

அரசாங்கம் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்தினால் அது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும்-கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் 

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்துவது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும் அப்படி இல்லையாயின் காலதாமதத்தை மேற்கொள்ளுமாக இருந்தால் ஜனநாயகத்தை மதிக்காத குற்றச்சாட்டாக அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக இருக்கும் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் (07) வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 2017இல் இருந்து இது வரைக்கும் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு சாட்டுப்போக்குகளையும் சொல்லி எப்படி மாகாண சபை தேர்தலை நடாத்தாமல் பிற்போட்டார்களோ அது போல தற்கால அரசாங்கமும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஒரே அரசாங்கத்தையும் குற்றம்சாட்ட முடியாது. ஏனெனில், மாகாண சபை தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட்டதால் முதலாவதாக 2017இல் சப்ரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களும் முடிவுற்றது. 2017இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையில் நல்லாட்சி அரசாங்கம், 2019இல் கோட்டபாய அரசாங்கம் போன்றன மாகாண சபை தேர்தலை நடாத்துவதில் அக்கரை காட்டவில்லை. அது போன்று 2022இல் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதிலும் தேர்தலை நடாத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், இந்த அரசாங்கம் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெளிவாக சொல்லப்பட்ட விடயம் தான். அரசாங்கத்தை கையில் எடுத்து ஒரு வருடத்திற்குள் நடாத்துவதாக சொன்னார்கள். ஆனால், இருபது மாதங்களைக் கடந்து இரு வருடங்களை அண்மித்துள்ளது. இருந்த போதிலும் பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தினார்கள். அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், மாகாண சபை தேர்தலை பிற்போட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறித்த தேர்தலை நடாத்த முடியாமைக்கு தொழில் நுட்ப கோளாறு, எல்லை மீள்நிர்ணய பிரச்சினை உள்ளது. தேர்தல் சட்டமுறையில் மாற்றம் கொண்டு வரமுயற்சி செய்தார்கள். இதில் 2017இல் கலப்பு தேர்தல் முறையை கொண்டு வர முயற்சித்தார்கள். பாராளுமன்றத்தில் இதற்கு சார்பாக எவரும் வாக்களிக்காததால் அது தடைப்பட்டது.

தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்த வேண்டுமாக இருந்தால், பழைய முறையில் விகிதாசார விருப்பு வாக்கு முறையில் நடாத்தப்பட வேண்டும்.

அதற்கு மாற்றமாக புதிய முறையில் நடாத்துவதாக இருந்தால், காலம் தேவைப்படும். இதனால் இருட்டடிப்பாக மாறலாம். அண்மையில் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்வாக பழைய முறையில் தேர்தல் நடாத்தப்பட்ட வேண்டும். அதன் பின் எல்லை நிர்ணயம் செய்து புதிய முறைக்கு மாற்றலாம். 

எனவே, எமது தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் கூட பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதையே வலியுறுத்துகிறோம் என்றார்.

ஹஸ்பர் ஏ.எச் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *