இஸ்ரேல் முழு முஸ்லிம் உலகிற்கும் அச்சுறுத்தல் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “இஸ்ரேல் முழு முஸ்லிம் உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு எதிராக “ஒற்றுமையான இராணுவ முன்னணி” ஒன்றை முஸ்லிம் நாடுகள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஊடகமொன்றிடம் பேசிய ஆசிப்,
“இஸ்ரேலைப் பொறுத்தவரை அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.
இஸ்ரேல் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் நேரடி அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாலஸ்தீனப் பிரச்சினை நிரந்தரமாகத் தீர்க்கப்படும் வரை இஸ்லாமிய உலகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் தேர்தலில் தோல்வியடைந்தாலும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என ஆசிப் கூறினார். இஸ்ரேலின் ஆட்சியில் யார் வந்தாலும் பாலஸ்தீனியர்களுக்கான அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கருத்துகள், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப், சவூதி பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் சல்மான் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெஜப் தையிப் எர்தோகான் ஆகியோர் மக்காவில் Makka Joint Defense Agreement எனப்படும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும். இதன் மூலம் கூட்டு தடுப்பு திறன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே நோக்கமாகும்.
துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிதான், இந்த ஒப்பந்தத்தை NATO-வின் Article 5 கூட்டு பாதுகாப்பு விதிமுறையுடன் ஒப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் முற்றிலும் தற்காப்பு நோக்குடையது என்றும், குறிப்பிட்ட எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தான் இதுவரை இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை மற்றும் அதனுடன் தூதரக உறவுகளையும் ஏற்படுத்தவில்லை. கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967க்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட பாலஸ்தீன அரசை உருவாக்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிப்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றாது என பாகிஸ்தான் கூறி வருகிறது.
