21 நாட்களில் 1.38 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 1,38,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிகாரசபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 23 சதவீதமாகும்.
மேலும், சீனாவிலிருந்து 8,484 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2026 ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12,85,303 ஆக பதிவாகியுள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து 3,25,417 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,23,526 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ரூ.475.6 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம் சுற்றுலா வருவாய் மூலம் ரூ.50.5 பில்லியன் கிடைத்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
