ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியான ஜுர்ம் பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு ஆய்வு நலையம் (NCS) உறுதிப்படுத்தியது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில், குறிப்பாக அதிக செயல்பாடுள்ள நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள இந்து குஷ் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுக்களின் மோதல் மண்டலத்தில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால். அது நிலநடுக்கங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.
மேலும், ஹெராட் பகுதி உட்பட நாட்டின் சில பகுதிகள் வழியாக ஒரு பெரிய புவிப்பிளவு கோடும் செல்கிறது. நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள் மற்றும் பருவகால வெள்ளப்பெருக்குகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் ஆப்கானிஸ்தான் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிடுகிறது.
