உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினரின் கண்காணிப்பு விஜயம்

2009ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் டி. வி. பந்துலசேன உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (14) நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனையின் போது, நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது முதல் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வரையிலான முழுமையான செயல்முறைகளும் அவதானிக்கப்பட்டன.

நிலக்கரியை இறக்குதல், அவற்றைச் சேமித்து வைத்தல், எழுமாறான முறையில் மாதிரிகளைப் பெறுதல், மாதிரிப் பரிசோதனை மற்றும் பிரதான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் போன்ற விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தினர்.

இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல், இவ்வருடம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை, அரசாங்கத்திற்கு உரித்தான ‘இலங்கை நிலக்கரி (தனியார்) நிறுவனம்’ அல்லது அது சார்ந்த நிறுவனங்களினால் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் போதும், மின்சார உற்பத்தியின் போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *