கற்பிட்டி சியாஜ் சிறந்த சிரேஷ்ட ஊடகவியலாளராக தினச்சுடர் தேசிய விருது விழாவில் கௌரவிப்பு.

ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தினச்சுடர் தேசிய விருது வழங்கல் இரண்டாம் கட்ட நிகழ்வு வியாழக்கிழமை (17) கொழும்பு பொது வாசிகசாலை மண்டபத்தில் நடை பெற்றது.
இதில் கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களாக ஊடகத்துறையில் சேவையாற்றி வரும் எம்.எச்.எம். சியாஜ் சிறந்த சிரேஷ்ட ஊடகவியலாளராக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியர், மூத்த ஊடகவியலாளர் ஏ.எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக திரைப்பட இயக்குனரும் நடிகருமான திருவாய் மொழி கேசவன், கலைஞர் குணசேகரன், மற்றும் ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எம்.எம்.இர்பான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், புகைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள், மேடை நாடகக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், சமூக சேவையாளர்கள், நூலாசிரியர்கள், அழகு கலை நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் என 46 பன்முக ஆளுமைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ் புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (பூஜா) செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்
