உள்நாடு

பெருந்தலைவர் அஷ்ரப்பின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை கல்முனையில் : எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் ஏற்பாடு – பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் நினைவுரை

மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது ஆண்டு தலைவர் தின நினைவேந்தல் நிகழ்வு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில் நாளை (16.09.2026) புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு கல்முனை மயோன் மாவத்தையில் அமைந்துள்ள மயோன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் அமைச்சர் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நினைவேந்தல் நிகழ்வாக இம்முறை 26ஆவது வருடமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரும் தலைமைப்பேராசிரியருமான றமீஸ் அப்துல்லாஹ், பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல், சமூகப் பங்களிப்புகள் மற்றும் அவரது சிந்தனைகள் தொடர்பான சிறப்பு நினைவுரையை நிகழ்த்தவுள்ளார்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், சமூக அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைவர் அஷ்ரப்பின் அரசியல் பயணத்துடனும் சமூகப் பணிகளுடனும் நெருக்கமாகப் பயணித்தவர்கள், அவரது அபிமானிகள், அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மறைந்து 26 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரது அரசியல் சிந்தனைகள், சமூகப் பணிகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பான அவரது பங்களிப்புகள் இன்றும் பல்வேறு தரப்பினராலும் நினைவுகூரப்பட்டு வருகின்றன.

நூருல் ஹுதா உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *