உள்நாடு

GEM SRI LANKA 2027; பாங்கொக்கில் இலங்கையின் முன்னணி இரத்தினக் கண்காட்சியின் சர்வதேச அறிமுக விழா

இலங்கையின் சர்வதேசப் புகழ்பெற்ற இரத்தினக் கல் துறை, தனது அடுத்த முக்கியமான சர்வதேசப் பயணத்தை ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது. GEM SRI LANKA 2027 கண்காட்சியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா எதிர்வரும் 2026 செப்டெம்பர் 6ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள Holiday Inn Bangkok Silom ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு GEM SRI LANKA கண்காட்சியின் நான்காவது பதிப்பை அறிமுகப்படுத்துவதுடன், இலங்கையின் இரத்தின மற்றும் ஆபரணத் துறைக்கான முக்கியமான மைல்கல்லாகவும் அமையவுள்ளது. முதல் முறையாக, இலங்கையின் முன்னணி இரத்தினக் கண்காட்சி ஒன்றின் உத்தியோகபூர்வ அறிமுக விழா நாட்டின் எல்லைகளுக்கு வெளியே சர்வதேச தளத்தில் நடைபெறுகிறது. இதன் மூலம் இலங்கையின் இரத்தினத் துறை, சர்வதேச முன்னணி வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்கள் முன்னிலையில் புதிய பரிமாணத்துடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பாங்கொக் அறிமுக விழாவில் 250க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முன்னணி இரத்தின மற்றும் ஆபரண வர்த்தகர்கள், சர்வதேச கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் கலாநிதி எஸ்.பி. சமிந்த மற்றும் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவரும் UNESCAP இற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான மேன்மைதங்கிய விஜயந்தி எதிரிசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்களின் பங்கேற்பு, GEM SRI LANKA 2027 சர்வதேச அறிமுக விழாவுக்கு அரசாங்க, தொழில்துறை மற்றும் இராஜதந்திர ரீதியான முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.
இலங்கையின் இரத்தினத் துறைக்கான சர்வதேச வர்த்தகத் தளம்
பாங்கொக்கில் நடைபெறும் இந்த அறிமுக விழா, ஒரு சாதாரண கண்காட்சி அறிமுக நிகழ்வாக மட்டும் அமையாது. தாய்லாந்து மற்றும் இலங்கையின் முன்னணி இரத்தின மற்றும் ஆபரண வர்த்தகப் பிரமுகர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் வகையில் விசேட Town Hall மற்றும் Panel Discussion ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது சர்வதேச சந்தை வாய்ப்புகள், இலங்கை–தாய்லாந்து வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், உலகளாவிய இரத்தினக் கொள்வனவு வலையமைப்பை விரிவுபடுத்துதல், Ceylon Gemstones களுக்கான புதிய சந்தைகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச கொள்வனவாளர்களை இலங்கையின் இரத்தின வர்த்தகர்களுடன் நேரடியாக இணைத்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

GEM SRI LANKA இன் வளர்ந்து வரும் இலக்கு, இலங்கையை சிறந்த இரத்தினக் கற்களின் நாடாக மட்டுமன்றி, உலகளாவிய நிற இரத்தினக் கற்கள் வர்த்தகம், நேரடி கொள்வனவு, முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான முக்கிய மையமாக நிலைநிறுத்துவதாகும்.
GEM SRI LANKA தனது ஆரம்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முதலாவது பதிப்பில் 55 கண்காட்சியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி, இரண்டாவது பதிப்பில் 90க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும், மூன்றாவது பதிப்பில் Shangri-La Colomboவில் 110க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும் இணைத்துக் கொண்டது.

நான்காவது பதிப்பு – மேலும் பிரமாண்டமாகவும், வலுவானதாகவும், சர்வதேசமயமாகவும்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள GEM SRI LANKA 2027, எதிர்வரும் 2027 ஜனவரி 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு Shangri-La Colomboவில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையின் முன்னணி இரத்தின மற்றும் ஆபரண நிறுவனங்களுடன், சர்வதேச கொள்வனவாளர்கள், சேகரிப்பாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த பதிப்பு கணிசமான சர்வதேச வருகையைப் பதிவு செய்து, இலங்கை இரத்தின வர்த்தகர்களுக்கும் உலகளாவிய கொள்வனவாளர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு தளமாக GEM SRI LANKA உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தியது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, GEM SRI LANKA 2027 மேலும் அதிகமான வெளிநாட்டு கொள்வனவாளர்கள், முன்னணி வர்த்தகர்கள் மற்றும் உயர்மதிப்புடைய இரத்தின வர்த்தக நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.

நான்காவது பதிப்பில் உயர்தர Ceylon Sapphires மற்றும் இரத்தினக் கற்கள், நேரடி கொள்வனவு, சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் இலங்கையின் இரத்தினக் கற்கள் சுரங்கத்திலிருந்து உலக சந்தையை அடையும் வரையிலான முழுமையான பயணம் ஆகியவற்றுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

இலங்கையிலிருந்து உலகை நோக்கி
GEM SRI LANKA 2027 இன் அறிமுக விழாவை பாங்கொக்கில் நடத்துவதற்கான தீர்மானம் ஒரு வலுவான செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்கிறது – இலங்கையின் இரத்தினத் துறை உலகின் சர்வதேச மேடையில் உலகத்துடன் வர்த்தக ரீதியாக இணைவதற்கு தயாராகியுள்ளது.
ஆசியாவின் முக்கியமான இரத்தின மற்றும் ஆபரண வர்த்தக மையங்களில் ஒன்றாக விளங்கும் பாங்கொக், GEM SRI LANKA 2027 ஐ பிராந்திய மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த சர்வதேச தளமாக அமைகிறது.
அரசாங்கத்தின் தலைமைத்துவம், இராஜதந்திர பிரதிநிதித்துவம், சர்வதேச வர்த்தகப் பங்கேற்பு மற்றும் தொழில்துறை நிபுணத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த பாங்கொக் அறிமுக விழா, GEM SRI LANKA இன் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தனது உலகப் புகழ்பெற்ற நிற இரத்தினக் கற்களுக்கான நம்பகமான நாடாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தி வரும் நிலையில், GEM SRI LANKA 2027 ஒரு கண்காட்சியைத் தாண்டி, இலங்கையின் பாரம்பரியம், திறமை மற்றும் பெறுமதிமிக்க இரத்தின வளங்களை உலக சந்தையுடன் இணைக்கும் ஒரு சர்வதேச வர்த்தகத் தளமாக உருவெடுக்கத் தயாராகி வருகிறது.
GEM SRI LANKA 2027 இன் பயணம் செப்டெம்பர் 6ஆம் திகதி பாங்கொக்கில் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் உலகின் இரத்தின மற்றும் ஆபரணத் துறையின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் 2027 ஜனவரி 7 முதல் 9ஆம் திகதி வரை கொழும்பு Shangri-Laவில் ஒன்றுகூடவுள்ளனர்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *