அஷ்ரப் நினைவுப் பேருரை நிகழ்த்த தமிழ்நாடு சாஜஹான் இலங்கை வருகை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்துடன் இணைந்ததாக, கட்சியின் பேராளர் மாநாடு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துவதற்கு தமிழக சட்டமன்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளை ஆராயும் வகையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது, காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களுடன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
