சீனங்கோட்டை இரத்தினக் கல் சந்தை;சிறந்த வர்த்தகத்திற்கான சமூகஒருங்கிணைந்த முன்மாதிரி
பேருவளை, சீனங்கோட்டை இரத்தினக் கல் சந்தையானது, உலகின் பழமையான திறந்தவெளி இரத்தினக் கல் சந்தைகளில் ஒன்றாகவும், பல தலைமுறைகளாகத் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பப்பட்ட தனித்துவமான வர்த்தகப் பாரம்பரியத்தைக் கொண்ட சந்தையாகவும் விளங்குகிறது.
இலங்கையின் உள்ளூர் மற்றும் சர்வதேச இரத்தினக் கல் வர்த்தகர்களும் வாங்குபவர்களும் சந்திக்கும் முக்கிய வர்த்தக மையமாக சீனங்கோட்டை இரத்தினக் கல் சந்தை திகழ்கிறது.
பரபரப்பான ஒரு நாளில், 5,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இச்சந்தைக்கு வருகை தருகின்றனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் உயர்தர இரத்தினக் கற்களைப் பார்வையிடவும், இச்சந்தையின் உயிரோட்டமான வர்த்தகச் சூழலை அனுபவிக்கவும் அவர்கள் இங்கு வருகின்றனர்.
சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தை செயல்பாட்டு நேரங்களையும் ஒழுங்குமுறைகளையும் (Protocol) உருவாக்குவது இயல்பான அடுத்தகட்ட முன்னேற்றமாக அமைந்தது.
இதற்காக வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள், சந்தைப் பார்வையாளர்கள், அப்பகுதி குடியிருப்பாளர்கள், சொத்து உரிமையாளர்கள், வாடகையாளர்கள், வீதிப் பயனாளர்கள், வர்த்தக மற்றும் சமூக அமைப்புகள், அத்துடன் பேருவளை நகர சபை ஆகிய அனைத்து தரப்பினரும் கலந்துரையாடி ஒருமித்த முடிவுக்கு வந்தனர்.
இந்தப் பின்னணியில், புதிய சீனங்கோட்டை இரத்தினக் கல் சந்தை வர்த்தக ஒழுங்குமுறை (Chinafort Gem Market Trading Protocol) கடந்த ஜூலை 18ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அதன் முதல் மாத செயற்பாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், அனைத்து தரப்பினராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையிலான சந்தை செயற்பாட்டு நேரம் மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் கூட்டு முடிவின் அடிப்படையில், புதிய 9.00 மணி முதல் 3.00 மணி வரையிலான சந்தை நேரம் ஆரம்பிக்கும் வைபவமும் கடந்த ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி (பேருவளை தொகுதி #NPP அமைப்பாளர் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
மேலும், பேருவளை நகர சபைத் தலைவர் மஃபாஸிம் அஸாஹிர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் கலாநிதி எஸ்.பி. சாமிந்த, அதன் பணிப்பாளர்கள், சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ரிஸ்வான் நயீம் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கத்தின் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், இரத்தினக்கல் வர்த்தகர்கள், அப்பகுதி குடியிருப்பாளர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் வாடகையாளர்கள் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
உலகளாவிய ரீதியில் சீனங்கோட்டை இரத்தினக் கல் சந்தையை நம்பகமான மற்றும் தரமான வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட இரத்தினக் கற்களைப் பெறுவதற்கான முதன்மை மூலச் சந்தையாக நிலைநிறுத்துவதற்கும், அதன் வர்த்தகப் பெயரையும் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்துவதற்கும் சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Gem and Jewellery Traders Association) மேற்கொண்ட சிறப்பானதும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதுமான சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், சீனங்கோட்டை சந்தை இன்று பெற்றுள்ள இந்தப் பெரும் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளன.
புதிய வர்த்தக ஒழுங்குமுறையின் முதல் மாத செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கமும் பேருவளை நகர சபையும், சந்தையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ந்து மிகுந்த வரவேற்பையும் நேர்மறையான பின்னூட்டங்களையும் பெற்று வருகின்றன.
இச்சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், இலங்கையின் ஒட்டுமொத்த இரத்தினக்கல் சமூகத்தின் நலனுக்கும், அனைத்து சந்தைப் பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வுடன் வர்த்தக நடவடிக்கைகளைச் சுமுகமாக இணைத்துச் செல்வதற்கும், சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கமும் பேருவளை நகர சபையும் இணைந்து தொடர்ந்து செயல்படுகின்றன.
ஒரே சந்தை. ஒரே ஒழுங்குமுறை. ஒரே கூட்டு அர்ப்பணிப்பு. சீனங்கோட்டை இரத்தினக் கல் சந்தை – சிறந்த வர்த்தகத்திற்கான சமூக ஒருங்கிணைந்த முன்மாதிரியாகும்.





(பேருவலை பீ.எம்.முக்தார்)
