உள்நாடு

நேபாளத்துக்கு இலங்கையின் உதவிக்கரம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் வகையில், ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர நிவாரண மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒற்றுமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நெருக்கடியான தருணத்தில் நேபாள மக்களுடன் இலங்கை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கானலுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதுடன், நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையை தெரிவித்துள்ளார்.

மேலும், நேபாள அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இலங்கையால் வழங்கக்கூடிய மேலதிக உதவிகள் தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *