உள்நாடு

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள அனுபமா மங்கள விக்ரமாராச்சியை, சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் நேற்று (25) நேரில் சந்தித்துக் கௌரவித்ததுடன் இக்கோரிக்கையையும் முன்வைத்தனர்.

ஏனைய மாவட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, அம்பாறை மாவட்டத்திலும் அரச காணி ஒன்றில் மாதிரி வீட்டுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரச அதிபர், எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய்ந்து, உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிலோன் மீடியா போரத்தினர் ‘இன்றைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஊடகவியலாளர்கள் தமது பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். எனவேஇ தகுதியான ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் , தேசிய அமைப்பாளர் எம்.வை. அமீர், செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உப செயலாளர் என்.எம். அப்ராஸ் மற்றும் உப தலைவர்களான எஸ். தஸ்தகீர், எம்.எம். ஜபீர், உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

(மத்திய முகாம் செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *