உள்நாடு

எல்நினோ தாக்கத்தினால் 7 மாவட்டங்கள் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் எல் நினோ நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்கத்தின் காரணமாக 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீரை விநியோகிக்கவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைவாக, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அதிகளவிலான குடிநீர் மொனராகலை மாவட்டத்திற்கே விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்குக் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களை உள்ளடக்கிய 28,523 பேருக்குக் குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் 02 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் அதிகளவில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *