உள்நாடு

கற்பிட்டி கோட்ட பாடசாலைகளில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான செயலமர்வு

பல் சமூகங்களையும் சேர்ந்த பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளில் மாணவர் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வை வளர்த்து நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் செயலமர்வொன்று பு/திகழி முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது

இச்செயலமர்வில் கற்பிட்டி கல்விக் கோட்டத்திலுள்ள தமிழ், சிங்கள முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சமாதான கல்வி பிரதிப் பணிப்பாளரும் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம். ஜவாதின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.ஜே.ஏ.நாசிர் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

பல்சமூக சூழலில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் அவை மோதல்களாக மாறுவதை தவிர்த்துக் கொள்ள முடியுமெனவும் பிற கலாசார அம்சங்களை அறிந்து பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் மலரவும் அதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்ப உதவுமென்பதனை வளவாளர் தெளிவூட்டினார்.

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இச் செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *