உள்நாடு

அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை

இவ்வாண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 71 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 13,719 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 8,476 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 19,945 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதர மாவட்டங்களாக கொழும்பில் 18,588 பேரும், கண்டியில் 6,786 பேரும், மாத்தறையில் 6,082 பேரும், களுத்துறையில் 6,059 பேரும், காலியில் 5,133 பேரும், இரத்தினபுரியில் 4,981 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாதாந்த அடிப்படையில், ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளிகளும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *