உள்நாடு

அரசாங்கத்தின் ஜனநாயக சீர்திருத்தங்களை வரவேற்கிறோம், முக்கிய துறைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியம்; கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுதல்

தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து சமூகங்களையும் சமமாக மதிக்கும் நோக்கில் முன்னெடுத்து வரும் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை, பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதுள்ளமை ஒரு குறைபாடு என சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா அவர்,அரசாங்கம் எதிர்பார்க்கும் தகுதி மற்றும் திறமையுள்ள முஸ்லிம் ஒருவரை அந்த குழுவுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் கேட்டுக்கொண்டார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாதமை கவலைக்குரிய விடயம் என சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பது முக்கியமானதாகும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (19) நிலையியற்கட்டளை 27/ 2இன் கீழ்,கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்தும் நோக்கில் முன்னெடுத்து வரும் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. எனினும், அண்மையில் இடம்பெற்ற சில முக்கிய நியமனங்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கவலைகளையும் நியாயமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பது நிர்வாக எல்லைகளை வரையறுக்கும் ஒரு தொழில்நுட்ப அமைப்பு மட்டுமல்ல. அது தேர்தல் பிரதிநிதித்துவம், அரசியல் சமநிலை மற்றும் மக்களின் ஜனநாயகப் பங்கேற்புடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கியமான சுயாதீன நிறுவனமாகும்.

குறிப்பாக சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் போது, அப்பகுதிகளின் வரலாற்றுப் பின்னணி, மக்கள் தொகைப் பரவல், நிர்வாகத் தேவைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை சமநிலையுடன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக ஆணைக்குழுக்களில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நியாயமான பிரதிநிதித்துவம் இருப்பது அவசியம்.எனினும், தற்போதைய தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் இடம்பெறாமை அச்சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, முக்கிய தேசிய நிறுவனங்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் பிரதிபலிக்கப்படவில்லை என்ற உணர்வும் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *