தேசிய மீலாத் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; நீர்கொழும்பு பகுதியில் பல்வேறு நிகழ்வுகள்
42 வது தேசிய மீலாதுன் நபி உத்தியோகபூர்வ அரச பெரு விழா 2026 தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று(19) நடைபெற்றது.
மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் நிஹ்மத்துல்லா நிலூபர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு பெரியமுல்ல அல் ஹிலால் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்ததுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையொட்டி எதிர்வரும் 22ம் திகதி நீர்கொழும்பு போரத்தோட்ட அல் பலாஹ் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 23ம் திகதி மரநடுகை நிகழ்வு நீர்கொழும்பு காமச்சோட ஜும்மா பள்ளியில் நடைபெறவுள்ளது, சகல சமூகத்திற்குமான திறந்தவெளி பள்ளி பார்வையிடுதல் எதிர்வரும் 24ம் திகதி நீர்கொழும்பு பெரிய முல்லை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடைபெறும் இதற்கு மேலதிகமாக கலாசார கண்காட்சி, மீலாதுந் நபி ஞாபகார்த்த முத்திரை வெளியீடு மற்றும் உலமாக்கள் கெளரவிப்பு, மீலாதுந் நபியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் ஊடக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
