கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்:சட்டத்தரணிகளுக்கு மௌலவி மிப்லால் அவசர அழைப்பு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை விவகாரத்தை மையப்படுத்தி இடம்பெற்று வரும் இழுபறி நிலைமை இன்னும் முற்றுப்பெறவில்லை . தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சட்டத்தரணிகள் உடனடியாக முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், இந்த விவகாரத்தில் தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் மௌனம் குறித்தும் தனது பலத்த சந்தேகத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டிஇ கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) மாலை நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தவிசாளர் மௌலவி மிப்லால்:
“ஆதம்பாவா எம்பி கூறுவது போல இந்தப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதே இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறித்த 9 பெண் ஊழியர்களும் சீருடை விதியை துஷ்பிரயோகம் செய்வதாகக் குறிப்பிட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் சுகாதார அமைச்சுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. அடுத்த வரும் நாட்களில் அந்த ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்பக்கூடிய அதிகாரங்கள் வைத்தியசாலை வட்டாரங்களுக்கு இருக்கிறது என நம்புகின்றேன்.
நிலைமை இவ்வாறிருக்க, ‘பிரச்சினை முடிந்துவிட்டது’ என்ற எம்பியின் கூற்றினால் நீதிமன்றம் செல்ல முற்படுபவர்கள் கூடப் போகாமல் தடுமாறும் நிலை ஏற்படும். எம்பி அவர்கள் ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சரையும் திருப்திப்படுத்த விரும்பினால் அமைதியாக இருக்கட்டும், ஆனால் நீதிக்காகப் போராட நினைப்பவர்களைத் தடுக்க வேண்டாம்.”
ஹக்கீம் மற்றும் சுமந்திரன் தலைமையிலான 6 கட்சிகள் அடங்கிய கூட்டணியின் மௌனத்தைக் கடுமையாக விமர்சித்த அவர்,”பிரபல்யம் அடைவதற்கு நன்மை செய்வது ஒரு வழி, தீமை செய்வது மற்றொரு வழி. கிழக்கு மாகாணத்தில் உள்ள ‘சுகுணன்’ என்பவர் பிரபாகரனின் காலத்திலிருந்தே முஸ்லிம்களை அசையவிடாது தடுத்து, கெடுதல் செய்வதன் மூலமே பிரபல்யம் அடைந்து வருகிறார். தற்போது வடகிழக்கு தமிழ் மக்களிடையே அவருக்கு ஒரு வரவேற்பு உருவாக்கப்படுகின்றது. இதன் பின்னணி என்ன? தயவுசெய்து அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனம் காக்கக் கூடாது,” எனக் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தெளிவான ஒரு முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்திய அவர் இரவோடிரவாக வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடும் திறமையுள்ள இந்த அரசாங்கத்திற்கு, இந்த ஆடை விவகாரம் தொடர்பாக ஒரே நாளில் ஒரு தெளிவான சுற்றறிக்கையை பெற முடியும். ‘எமக்கு முஸ்லிம் மக்கள் தேவையில்லை, டயஸ்போராவை மட்டுமே திருப்திப்படுத்த வேண்டும்’ என்ற நிலைப்பாடு அரசாங்கத்திற்கு இருக்குமானால், அதையாவது சுற்றறிக்கையாக வெளியிட்டு இரண்டில் ஒன்றை அவசரமாகச் செய்து முடியுங்கள்,” என ஆவேசத்துடன் சுட்டிக்காட்டினார்.

(பாறுக் ஷிஹான்)
