கோட்டாவின் ரிட் மனு ஆகஸ்ட் 3 இல் பரிசீலனைக்கு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச் சமர்ப்பித்தார்.
மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரிட் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
