மது போதை சாரதியின் கவனயீனம், தானசாலை கூட்டத்தில் பாய்ந்த கார்; ஆறு பேர் பலி, ஏழு பேர் காயம்
கொழும்பு – மீகொட பகுதியில் தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான குறித்த சாரதி மதுபோதையில் இருந்தமை தற்போது உறுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணைகளில் அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில், வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
