மினா அசெளகரியங்கள் குறித்து அரசு தீவிர விசாரணை நடாத்த வேண்டும்; ஶ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கோரிக்கை
இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் மினாவில் எதிர் கொண்ட அசெளகரியங்கள் பற்றி அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது பற்றி கட்சியின் தலைவர் மு. முஸ்னத் அவர்கள் சமய விவகார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நடை பெற்ற ஊழல்கள் காரணமாக இது போன்ற ஊழல்கள் ஹஜ்ஜில் நடை பெற்ற செய்திகள் பல வந்துள்ளன.
இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கமா நகர் சென்றுள்ளனர்.
புனித மக்காவில் இருந்து மினா மைதானத்திற்கு புறப்பட்டுச் சென்றார்கள், அங்கு இலங்கை ஹஜ் முகவர்கள் சவூதி அரேபிய பிரயாண முகவர் ஊடாக ஒதுக்கிக் கொண்ட கூடாரங்களில் தரித்திருந்தனர்.
என்றாலும் அவர்களில் சுமார் 3000 யாத்திரிகர்களுக்கு 38 குளியலறை வசதிகளே இருந்ததாலும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் இரண்டு சாப்பாட்டு மண்டபங்கள் ( புஃபே) மாத்திரம் இருந்ததாலும் யாத்திரிகர்கள் பாரிய அசெளகரியங்களை எதிர் கொண்டதாக தெரிய வருகிறது.
உணவிற்காகவும் மலசலகூட வசதிகளுக்காகவும் குளியல் மற்றும் வுழூ செய்து கொள்வதற்காகவும் வரிசைகளில் முண்டியடிக்கும் நிலையில், அமைதியாக தமது வழிபாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை யாத்திரிகர்கள் சார்பில் முன்கூட்டியே வங்கியில் கட்டனங்கள் செலுத்தப்படடும் முற்சியான ஸவூதி சேவை வழங்குநரை தெரிவு செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து கவலை தெரிவிக்கப் படுகிறது. இதில் சில முகவர்கள் இரகசியமாக பேரம் பேசி ஹாஜிகளை புதிய சவூதி முகவரிடம் பாரம் கொடுத்துள்ளதாகவும் முறைப்பாடுகள் வந்துள்ளன.
கிட்டத்தட்ட ஐந்து நாட்களை கொண்ட கிரியைகளை ஹாஜிகள் தொடராக செய்ய இருக்கும் நிலையில் பொது வசதிகள் இவாவாறான நிலையில் இருந்தால் அதிகம் சிரமப்படுவார்கள்.
கூடாரங்கள் உட்பட்ட வசதிகளை ஒதுக்கித் தருவது ஹஜ் முகவர்கள் பொறுப்பு, பொதுவசதிகள் ஸவூதி ஹஜ் அமைச்சின் பொறுப்பு என்று கூறப்பட்டாலும் சகல யாத்திரிகர்களும் ஸவூதி முகவர்களுக்குரிய கட்டனங்களை செலுத்தி முன்பதிவுகளை செய்துள்ளமையால் அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுடைய நலன்களை கவனிக்கவென ஹாஜிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ஹஜ் நிதியத்தில் இருந்து செலவு செய்யப்பட்டு ஒரு பிரதி அமைச்சருடன் ஹஜ் குழுவினர் சிலரும் அங்கு சென்றிருக்கும் நிலையில் இவ்வாறானவை நடந்திருப்பது ஜனாதிபதி அநுர குமார அரசாங்கத்துக்கும் களங்கமாகும்.
ஆகவே இது பற்றி அரசாங்கம் பகிரங்க விசாரணை நடத்தி அதன் முடிவுகளை எமக்கும் சமூகத்துக்கும் தருமாறு ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கௌரவ அமைச்சரை கேட்டுக்கொள்கிறது.
மு. முஸ்னத்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.
