உள்நாடு

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11 ஆவது ஆண்டு விழா

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11 ஆவது ஆண்டு விழா சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் சாய்ந்தமருது பொலிவேரியின் கிராமத்தில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் “மர்ஹும் கலைச்சுடர் சக்காப் மௌலானா ஞாபகார்த்த அரங்காக” வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றது.

பாரம்பரியக் கலையான கலாபூஷணம் அபூபக்கர் இஸ்ஸதீன் தலைமையிலான மருதூர் கலைமன்ற பொல்லடிக் குழுவினரால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டனர்.

மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்ஸான், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான மௌலவி ஏ. தௌபீக், ஏ.எச்.சபீகா, ஓய்வுநிலை கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஸ்ரப், சாய்ந்தமருது – மாளிகைக்காடு முன்னாள் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் முன்னாள் மரைக்காயருமான ஏ.எம். றசீது, அமானா நற்பணிமன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட், மருதமுனை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். அன்சார், சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி. றிப்கா அன்ஸார், பிரதேச பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கலை, இலக்கிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்ற தோடு, பல்துறைக் கலைஞரும் மன்றத்தின் உபதலைவருமான என்.எம். அலிக்கான், கலையுலகில் ஆற்றிவரும் அயராத சேவைக்காக, அவரது குடும்பத்தினர் புடைசூழ “மருதூர் அலிக்கான்” எனும் சிறப்புப் பட்டத்துடன் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் இம்மன்றத்தை உருவாக்கி, இலைமறை காயாக உள்ள பலதரப்பட்ட கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து, பிரதேசத்தில் கலையை அழிய விடாது, இன்றும் ஆற்றிவரும் பணிக்காக, மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா அவரது மனைவி சகிதம் சபையோர் மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் கௌரவிப்புக்களும் மற்றும் மன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வை ஆசிரியரும் ஒலிபரப்பாளருமான ஏ.எல். நயீம் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *