புத்தள மாவட்ட கலாச்சார, இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
சமுர்த்தி சிறுவர் கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பிரதேச செயலக, மற்றும் மாவட்ட செயலக மட்ட கலாச்சார மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (10) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான மேற்பார்வையில் சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமுர்த்தி சிறுவர் கழகங்களுக்கு இடையிலான கலாச்சார மற்றும் இலக்கிய போட்டிகளில் பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான நிகழ்வு கல்பிட்டி பிரதேச செயலகத்தில் இன்று (10) கல்பிட்டி பிரதேச செயலாளர் எஸ்.எம்.பி. நந்தசேன தலைமையில் இடம்பெற்றது.
பல்வேறு வயதுப் பிரிவுகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பிரிவில் இடம்பெற்ற கவிதை, பேச்சு, கட்டுரை எழுதுதல், கதை எழுதுதல், சித்திரம் வரைதல் மற்றும் தனி , குழு நடனம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பிரதேச செயலக மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், மாவட்ட செயலக மட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் இந்நிகழ்வில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கல்பிட்டி சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமையாளர் டபிள்யூ. டினூஸா மதுரங்கி , கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரோஹினி குமாரி, கல்பிட்டி சமுர்த்தி வங்கி சங்கத்தின் உத்தியோகத்தர் அன்டன் சமந்த, கல்பிட்டி சமுர்த்தி வங்கியின் வெளிக்கள முகாமையாளர் அசீம் மரைக்கார் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






(அரபாத் பஹர்தீன்)
