உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காத உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பிராந்திய பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன் தெரிவிப்பு
பொதுமக்களுக்கு சுகாதாரமானதும் தரமானதுமான உணவுகள் கிடைப்பதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தெரிவித்தார்.
கல்முனை பிராந்தியத்தில் உணவுகளை கையாளும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் மேம்பாடு தொடர்பாகவும் உணவுப் பாதுகாப்பு தொடர்பாகவும் புதன்கிழமை (28) துறைசார்ந்த உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உணவினை விற்பனை செய்யும் மற்றும் அவற்றைக்கையாளும் நிறுவனங்களை மேற்பார்வை செய்வதன் நோக்கம் உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்து பாதுகாப்பான உணவினை வழங்குவதற்காகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் உணவு நிறுவனங்களுக்குரிய சட்ட ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்காது நுகர்வோருக்கு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கக்கூடாது.
குறிப்பாக ரமழான் மாத காலப்பகுதியில் தற்காலிகமான மற்றும் நடமாடும் உணவகங்கள் அமைகின்றன. இவ்வாறான உணவகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களை அறிவுறுத்துவது பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களின் கடமையாகும். சுகாதார தரப்பினரினால் வழங்கப்படும் அறிவுரைகளை புறக்கனித்து அலட்சியமாக செயற்படும் நிறுவனங்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளாலும், பிழையான உணவுப் பழக்கத்தினாலுமே இன்று அதிகமானோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர். குறிப்பாக பாடசாலை சிற்றூண்டிச்சாலைகளில் அனுமதிக்கப்படாத உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தச் சிற்றூண்டிச்சாலைகள் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்பட வேண்டும். சிற்றூண்டிச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மாத்திரம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிராந்திய சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் அப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால், பொதுச் சுகாதார பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.ஷாபி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.லபீர், மாவட்ட உணவு மருந்து பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உட்பட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
உணவினை கையாளும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பிராந்தியப் பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
(றியாஸ் ஆதம்)