விளையாட்டு

கரைத்தீவு பொன்பரப்பி பீ.எஸ்.எல். அமைப்பின் வருடாந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடரில் ஸ்பைக் கிங் அணி சம்பியனாக மகுடம் சூடியுள்ளது

புத்தளம் கரைத்தீவு பொன்பரப்பி பீ.எஸ்.எல். அமைப்பின் வருடாந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தொடரில் ஸ்பைக் கிங் அணி சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

தொடரின் இரண்டாம் இடத்தினை கன்சஸ் அணி பெற்றுக்கொண்டது.

இந்த கரப்பந்தாட்ட தொடர் புத்தளம் கரைத்தீவு பொன்பரப்பி பீ.எஸ்.எல். அமைப்பினரின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடமும் நடாத்தப்பட்ட சுற்றுப் போட்டி தொடரின் இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கரைத்தீவு பிரதேசத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மூன்று நாட்களாக நடைபெற்ற இப்போட்டித் தொடரில் பல அணிகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தின. அதில் இறுதிப் போட்டியில் ஸ்பைக் கிங் அணியும், கன்சஸ் சிட்டி அணியும் பலத்த போட்டியில் மோதிக்கொண்டன.

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஸ்பைக் கிங் அணி வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டின் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமான் லெப்பை, புத்தளம் மாநகர சபை உறுப்பினர்களான ரணீஸ் பதுர்தீன் மற்றும் பர்வீன் ராஜா ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஜெஹுபர் மரிக்கார், ரில்வான், வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் நிதல், புத்தளம் பிரதேச சபை உறுப்பனர் ஏ.ஆர்.எம்.நில்பான், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை வேட்பாளர்களான மிராஜ் பைரூன், நஸ்ரக், இஹ்திஸாம், ஹஸன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கரைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். போட்டித் தொடரை பீ.எஸ்.எல்.அமைப்பினர் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தமை அனைவரின் பாராட்டையும் பெற்றது.

போதையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு முயற்சிகளுக்கு ஆதரவாக இந்தப் போட்டித் தொடர் நடத்தப்பட்டதுடன், அதற்கான அனுசரணையை ரணீஸ் பதுர்தீன் மற்றும் பர்வீன் ராஜா ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகள் இளைஞர்களை ஆரோக்கியமான செயற்பாடுகளின் நோக்கில் வழி நடத்துவதோடு, சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்துகின்றன.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *