உள்நாடு

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள் ஜனாதிபதி அனுசரணையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்; ஆதம்பாவா எம்.பி உறுதி

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் அனுசரணையுடன் தன்னால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்திடம் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகளிடையான முக்கிய சந்திப்பு நேற்று சனிக்கிழமை (16) காலை அவரது மாளிகைக்காடு அலுவலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் இவற்றுக்கு முன்னோடியாக தற்காலிக அலுவலக வசதிகள், கனரக வாகன வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் பாராளுமன்ற உறுப்பினரின் வகிபாகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக துரிதமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முழுமையான அனுசரணை இன்றியமையாததாகும் என்று சுட்டிக்காட்டிய மறுமலர்ச்சி மன்றப் பிரதிநிதிகள், இதற்கு ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியின் நெருங்கிய தோழராகவும் அதிகாரத்துடன் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி அவர்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினர்.

இந்த விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து, செயற்படுத்துவதில் தனக்குள்ள பொறுப்புணர்வையும்
ஆர்வத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள், இது தொடர்பிலான தனது நடவடிக்கைகளுக்கு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரதும் சிவில் சமூக அமைப்புகளினதும் முழுமையான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயத்தில் ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையை தன்னால் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களின் குறுகிய கால அவசர அழைப்பின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் இந்த விடயம் தொடர்பில் மறுமலர்ச்சி மன்றத்தின் அனைத்து செயற்பாட்டாளர்கள் மற்றும் போராளிகளையும் ஏனைய அமைப்பினரையும் ஒன்றிணைத்ததாக பரந்துபட்ட கலந்துரையாடல் ஒன்றை விரைவில் ஒழுங்கு செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகவும் மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட் குறிப்பிட்டுள்ளார்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *