உள்நாடு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் மாவட்ட வைத்திய சாலையில் குழந்தைகள் சிகிச்சைக்காக சென்ற இளம் தாய் ஒருவர் கட்டாக்காலி நாய் கடிக்கு உள்ளாகி புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த துர்ப்பாக்கிய சம்பவம் புதன்கிழமை காலை (29) இடம்பெற்றுள்ளது. புத்தளம் மன்னார் வீதி சோல்டன் பகுதியில் வசிக்கும் இளம் தாய் ஒருவரே இவ்வாறு நாய் கடிக்கு உள்ளாகியவர் ஆவார்.இதே வேளை நாய்க்கடிக்கு பயந்து ஓடிய இளம் தாயிடம் இருந்த, சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட குழந்தை தவறி கீழே விழுந்த நிலையில் தலையில் அடிபட்டு குழந்தையும் சிறுவர் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் தாய் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு இது தொடர்பாக முறைபாட்டினை எழுத்து மூலம் வழங்கியிருக்கின்றார்.புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் கட்டாக்காலி நாய்களுடைய தொல்லைகள் நீண்ட காலமாக நிலவி வருகின்றன.புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமத் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் சங்கத்தினர் இணைந்து நாய்களுடைய தொல்லைகளை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையிலேயே மற்றுமொரு இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதிடம் நாம் வினவியபோது,புத்தளம் தள வைத்தியசாலை எமது ஆட்சியில் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இந்த வைத்தியசாலையை சூழ சுற்றுமதில் அமைப்பதற்கான திட்டத்தை நாம் வகுத்துள்ளோம்.இதன் மூலம் கட்டாக்காலி நாய்களின் தொல்லையை இல்லாமல் ஒழிப்பதே எமது நோக்கமாகும்.எமது சுற்றுமதில் திட்டம் தாமதமாகிவருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசலுடன் இணைந்து கூடிய விரைவில் இதற்கான தீர்வை பெற்றுத்தருவோம் எனக்கூறினார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *