ஆர். ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் தேசிய “குரல் மகுடம்” விருது விழா
ஆர். ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் தேசிய ரீதியிலான “குரல் மகுடம்” அறிவிப்பாளர் போட்டி மற்றும் விருது வழங்கல் விழா, அண்மையில் கொழும்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில், ஆர் ஜே மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் வானொலி அறிவிப்பாளருமாகிய ஏ.எம்.இன்ஷாப் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடாதிபதி, பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் கலந்து சிறப்பித்தோடு கௌரவ அதிதிகளாக, சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸ்மி மூஸா, மனித நேய நட்பணிப் பேரவையின் தலைவர் இர்ஷாத் ஏ.காதர், சிலோன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய அஸ்மியாஸ் ஷஹீத், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வை.எம்.நிம்ஸாத், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.சமீஹா சபீர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவின் தயாரிப்பாளர் இஸ்பஹான் ஷர்ஃப்தீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் குரல் மகுடம் அறிவிப்பாளர் இறுதிச்சுற்றுப் போட்டியின் நடுவர்களாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளர்களான ஏ.பி.எம்.நிஸ்ரின், என்.தீபதர்ஷின, இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர் கியாஸ்.ஏ.புகாரி, வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமாகிய எம்.கவிதா பாரதி, எம்.ஜே.எம்.ஷுக்ரி, சக்தி தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் முஹம்மட் ஷவ்கி உள்ளிட்டவர்கள் குழுவிலும் பங்கேற்றனர்.
இவ்விழாவானது, இரண்டு கட்டங்களாக இடம்பெற்றதுடன், பல துறைகளில் சிறந்து விளங்கிய பெண்கள் கௌரவிக்கப்பட்டதோடு, குரல் மகுடம் அறிவிப்பாளர் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்கள், ரமழான் சுவனச்சோலைப் போட்டி வெற்றியாளர்கள் மற்றும் மருதாணிப் போட்டி வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு கடந்த கால ஊடகப் பயிற்சி நெறியில் முதல் தர நிலையைப் பெற்ற மாணவர்களுக்கான முதல்தர சிறப்புப் பதக்கங்களும், நடுவர் குழுவினருக்கும், அதிதிகளுக்கும் நினைவுப் பாராட்டுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





(ஏ.எச்.எம்.ஹாரீஸ்-மத்திய முகாம் செய்தியாளர்)
